பொது போக்குவரத்து சேவைகளின் இருப்பையும் அதிகரித்தல்

அனைத்து சமூகத்தினராலும் பாகுபாடின்றி இலகுவான முறையில், மலிவான விலையில், எளிய பராமரிப்புக்கு உட்பட்ட சிறந்த சேவையை வழங்கும் பொது போக்குவரத்து துறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நாட்டில் வாழும் அனைத்து மக்களின் கனவாகும். ஆனால் மலேசிய நாட்டின் அடிப்படை போக்குவரத்து வளர்ச்சியின் கட்டமைப்பு, தனிமனித வாகன உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, பொது போக்குவரத்துத் துறையை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பிற நகர்புறப் பகுதியில் வசிக்கும் மக்கள் சொந்த வாகனங்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டிய தரமான பொது போக்குவரத்து சேவையை வழங்காமல் போனதுதான்.

மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும், எரிபொருளைச் சார்ந்திருக்காது சுற்றுசூழலையும் மாசுபடுத்தாத நிலையில் நாடு இருக்கவும், நம்பிக்கை கூட்டணி நாடு தழுவிய நிலையில் பொது போக்குவரத்து சேவையின் இருப்பை அதிகரிக்க உறுதி கொண்டுள்ளது. வலுவான பொது போக்குவரத்து சேவையின்றி எந்த ஒரு நகரமும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்ல இயலாது.

எளிய முறையில் அணுகுதல்; இயக்குதல்

பொது போக்குவரத்து சேவை எளிய முறையில் அணுகுவதுடன் பயனர்கள் தங்களின் இலக்கை அடைய பொது போக்குவரத்து சேவை அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டம், நகர்புற மக்கள் பேருந்து நிலையங்களில் இருந்து நடந்தே சென்று பத்து நிமிடங்களுக்குள் பொது போக்குவரத்து நிலையங்களை அடைவதை 80% உறுதி செய்ய வேண்டும். மேலும், மக்கள் பொது போக்குவரத்து சேவைக்குக் காத்திருக்கும் நேரமும் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கு குறைந்தபட்சம் 10,000 பேருந்துகள் நாடு தழுவிய நிலையில் தேவைப்படுகின்றன. இதில் 7,000 பேருந்துகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டண வரம்பு

ரி.ம 50-க்கான மாதாந்திர கடவுச்சீட்டுகளைத் தவிர்த்து, நாளுக்கு ரி.ம 5-க்கு உட்பட்ட கட்டண வரம்பை அறிமுகப்படுத்துவதன் வழி, மக்கள் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவர்.

நுண்ணியக்கத்தை முறைபடுத்திச் சட்டப்பூர்வமாக்குதல்.

e-scooter, e-bicycle போன்ற நுண்ணியக்கங்களை முறைப்படுத்தவும் சட்டப்பூர்வமாக்கவும் நம்பிக்கை கூட்டணி உறுதி கொண்டுள்ளது. இதன் மூலம்,

First and last mile connection எந்த ஒரு நிலையிலும் தடையாகாதப்படி உறுதி செய்ய முடியும்.

பயணப் பற்றுச்சீட்டு

அரசாங்கம் Grab போன்ற வாடகை வண்டி நிறுவனங்களுடன் ஒன்றினைந்து பொது போக்குவரத்து நிலையங்களுக்குச் செல்லும் பயனிகளுக்குப் பயணப் பற்றுச்சீட்டை வழங்கலாம். இந்தப் பயணப் பற்றுச்சீட்டு ரி.ம 5-இல் இருந்து ரி.ம 10 வரையிலும் மின் பணப்பையில் (E-Wallet) வழங்கப்படும். இந்தப் பயணப் பற்றுச்சீட்டை LRT, MRT, KTM, மோனோரயில் போன்ற பொது போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட நாட்டில் இயங்கி வரும் முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து தொடங்கும் அல்லது முடிவடையும் பயணத்துக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கட்டணப் பாங்கை விரிவாக்குதல்

தற்போது வழக்கில் இருக்கும் Touch N Go கட்டணப் பாங்கை, பற்று அட்டை (Debit card) மற்றும் மின் பணப்பை (E-Wallet) வரை விரிவாக்குதல்.

இந்தக் கட்டுரையைப் பகிர: